அடுத்த முலிகை

6/recent/ticker-posts

Advertisement

Responsive Advertisement

நெல்லிக்காய் மருத்துவ பயன்கள்

             மூலிகை தமிழ் மருத்துவம்

உண்பவர்க்கு ஆயுள் பெருக்கும் நெல்லிக்கனி ஒன்றை ஔவைக்கு அதியமான் கொடுத்த கதை நமக்குத் தெரியும். அதியமான் கொடுத்தது மட்டுமின்றி எல்லா நெல்லிக்குமே அந்த மகத்துவம் உண்டு. இதனை உணர்ந்ததால்தானோ என்னவோ ‘ராஜ கனி’ என்றும் நெல்லியை அழைக்கிறார்கள்.

Phyllanthus emblica என்பது நெல்லியின் தாவரப் பெயர். Indian gooseberry, Amla ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படுவதுண்டு. ஆம்லகி, காயஸ்த்தா, அமோகா, அமிர்தபலா, தாத்ரிபலா, சிவா என்று வடமொழியில் அழைக்கிறார்கள்.

நெல்லிக்கனியில் அபரிமிதமான வைட்டமின் சி அடங்கி இருக்கிறது. தாது உப்புகள், அமினோ அமிலங்கள் ஆகியவையும் மிகுதியாக இருக்கின்றன. ஆப்பிளை விட பன்மடங்கு தாது உப்புகளையும் அமினோ அமிலங்களையும் அதிகமாகப் பெற்று விளங்குகிறது நெல்லி. இதில் உள்ள Phyllemblin எனும் வேதிப்பொருள் உடலின் மத்திய நரம்பு மண்டலத்தின் உளைச்சலைப் போக்குவதோடு, கடுப்போடு கூடிய வலியையும் தணிக்கும் குணம் வாய்ந்தது.

நெல்லிக்கனி தசை வளர்ச்சிக்கு உதவக்கூடியது... வாந்தியைத் தணிக்கவல்லது... இருமலை போக்க வல்லது... ரத்தக்கசிவைக் குணப்படுத்தக்கூடியது... பேதியை நிறுத்தக்கூடியது... நீரிழிவைக் கட்டுப்படுத்த வல்லது... மஞ்சள் காமாலை, பசியின்மை, சீதபேதி, பார்வைக் கோளாறு ஆகியவற்றுக்கு மருந்தாகிக் குணம் தரவல்லது... ஜீரண உறுப்புகளுக்கு பெரும் பலமாக அமைகிறது. நெல்லிக்கனியில் உள்ள Superoxide dismutase என்ற வேதிப்பொருள் வயது முதிர்வைத் தடுத்து இளமையைத் தக்க வைக்க உதவுகிறது. நெல்லிக்காய் பயன்படுத்தும் விதம் பற்றி இந்திய மருத்துவம் கூறும் வழிமுறைகள் 

* நெல்லி மர வேரை உலர்த்தி இடித்துச் சூரணித்து அதனோடு மேல்தோல் நீக்கிய எள்ளையும் சேர்த்துச் சாப்பிட மூளை நரம்புகளுக்கு பலம் ஏற்பட்டு ஞாபக சக்தியை மேம்படுத்தும். மூளையின் உறுப்புகளை பலப்படுத்த இது சிறந்த மருந்தாகும்.

* நெல்லிச்சாற்றில் இருக்கும் Salicylic acid எனும் அமிலம் சோர்வினைப் போக்கக் கூடியதாக உதவுகிறது. நெல்லிக்கனியும் சாறும் ரத்தத்தில் சேரும் கொழுப்புச் சத்தையும் கெட்ட கொழுப்புச் சத்தையும் குறைக்கவல்லது. இதனால் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு தடுக்கப்பட்டு இதயம் சீராக இயங்க உதவுகிறது.

* நெல்லி விதையைப் பொடித்து உள்ளுக்கு மருந்தாகப் பயன்படுத்தலாம். உடலின் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி உண்டாக்கவும் பித்தத்தைத் தணிக்கவும் வாந்தியைப் போக்கவும் இதன் விதையைப் பொடித்துக் கொடுப்பதுண்டு.

* நெல்லி விதையை தீநீர் ஆக்கி காய்ச்சலைத் தணிக்க கொடுப்பதுண்டு. மேலும், நீரிழிவைக் கட்டுப்படுத்தவும் நெல்லி விதையை தீநீராக்கிக் கொடுப்பர்.

* இலைகளை நீரில் இட்டு ஊறவைத்து எடுத்த நீரைக்கொண்டு கண்களைக் கழுவுவதற்கு உபயோகிப்பர். கண்  நோய்கள் பலவும் இதனால் குணமாகும். நெல்லியின் இலை பித்தத்தைப் போக்கவல்லது... ஆஸ்துமாவை  தணிக்கக்கூடியது... சளியை நீக்க வல்லது. நெல்லி இலைச்சாறு வாந்தியை  நிறுத்தவல்லது.

* நெல்லி மரத்தின் வேர் பட்டையைச் சூரணித்து நன்கு சலித்து வைத்துக்கொண்டு தேனில் குழைத்து வாய்ப்புண்களுக்குத் தடவி வர விரைவில் குணமாகும்.

* நெல்லிமரப்பட்டை சூரணத்தை அதிசார பேதிக்கு கொடுக்க அதிவிரைவில் குணம் உண்டாகும். நெல்லி மரத்தின் பச்சை வேர்பட்டைச் சாற்றோடு சிறிது தேனும் சேர்த்துக் கொடுக்கப் பால்வினை நோய் நீங்கும்.

* நெல்லி வேரினால் வாந்தி, சுவையின்மை, மலச்சிக்கல், காய்ச்சல் ஆகியன போகும். நெல்லி இலைக்கொழுந்தை அரைத்து மோரில் கலந்து கொடுக்க சீதபேதி
குணமாகும்.

* நெல்லி இலை கஷாயம் தயார் செய்து ஆறவைத்து கொப்புளிக்க வாய்ப்புண் ஆறிவிடும். நெல்லி இலையை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீருடன் சோம்பு சேர்த்து கொடுக்க பேதி நீங்கிப் போகும்.

* நெல்லிமரப் பூக்களைக் காயவைத்துப் பொடித்து வைத்துக்கொண்டு கொடுப்பதால் உடல் வெப்பம் தணிவதோடு மலச்சிக்கலும் மறைந்து போகும்.

* நெல்லிக்காயை இடித்து எண்ணெயில் இட்டுக் காய்ச்சிய தைலம் தலைக்குத் தடவி வருவதால் கூந்தல் கருமையும் மென்மையும் அடர்த்தியுமாக வளரும்.

* நெல்லிக்காயை ஊறுகாய் இட்டு சாப்பிட மூக்கில் நீர் வடிதல், மூக்கடைப்பு, தலை சுற்றல், வாயில் நீர் அதிகம் சுரத்தல், மலச்சிக்கல் ஆகியன நீங்கும். நெல்லி வற்றல் தீநீர் உடல் உஷ்ணம், பித்த மயக்கம், குமட்டல், பசியின்மை முதலிய நோய்களை குணப்படுத்தும்.

* பச்சை நெல்லியை அரைத்து தொப்புளின் கீழ் பூசி வைக்க நீர்க்கட்டு உடையும். சிறுநீர் தாராளமாக இறங்கும். நெல்லிச் சாற்றோடு திராட்சைச் சாறு, தேன் கலந்து பருகுவதால் காய்ச்சல், பேதி, நாவறட்சி ஆகியன குணமாகும்.

நெல்லியின் பயன் பற்றி தேரையர்
என்னும் சித்தர் எழுதிய பாடல்...
மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள
மாப்பிளைபோ லேயழகு வாய்க்குமே - சேப்புவருங்
கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா
யாமலக முண்ணமுறை யால்
(தேரன் வெண்பா)
மானுடர்க்கு வயது முதிர்வு என்பது இயற்கை என்ற போதிலும், அதைத் தடுத்துத் தாமதப்படுத்தும் வல்லமை நெல்லிக்காய்க்கு உண்டு. நெல்லிக்காயை அன்றாடம் உண்டு வருவதால் புது மாப்பிள்ளை போல அழகான தோற்றமும் இளமையும் கிடைப்பதோடு மோகமும் அதிகமாகும் என்பதே இப்பாடலின் பொருள்.

நெல்லிக்காயை தினமும் உண்பதால் உடல் சூடு, என்புறுக்கி நோய், மாதவிலக்கு, சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் வலி,
எரிச்சல், அடைப்பு, வாந்தி, வெள்ளை ஒழுக்கு, ஆண்குறியின் மேல் ஏற்படும் கொப்புளங்கள் ஆகியன விலகிப்போகும். நெல்லிக்காயை அரைத்துத் தலை முழுகிவரக் கண்களின் எரிச்சல் தணிந்து குளிர்ச்சி உண்டாகும்.

நெல்லி மருந்தாகும் விதம்

* நெல்லிக்காய்ச் சாறு புதிதாக எடுத்து அதனோடு சிறிது இஞ்சிச்சாறு, போதிய அளவு தேன் கலந்து உடன் சிறிது கல்லுப்பும் சேர்த்து உள்ளுக்குக் குடித்துவர சளித்தொல்லைகள் குணமாவதோடு, தலை நீரேற்றம் கூட மட்டுப்படும்.
* 750 கிராம் அளவு நெல்லிக்காயை எடுத்து ஒவ்வொரு காயிலும் கூர்மையான பெரிய ஊசியைக் கொண்டு பல துளைகளைச் செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு  லிட்டர் அளவு தேங்காய் எண்ணெயில்  துவாரம் செய்யப்பட்ட நெல்லிக்காய்களைச் சேர்த்து, பாத்திரத்தில் இட்டு, சூரியபுடமாக குறைந்தது பத்து நாட்களேனும் சூரிய வெயிலில் வைத்திருந்து பின் எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு தலைமுடியின் வேர்ப்பகுதியைத் தொடும்படியாக அன்றாடம் தலைக்கு தேய்த்துவர இளநரை தவிர்–்க்கப்படும். தலைமுடி மென்மையாகவும் பளபளப்பாகவும் விளங்கும். கண்களின் எரிச்சலும் தணிந்து குளிர்ச்சியும் பார்வைக் கூர்மையும் உண்டாகும்.

* அரை கோப்பை நெல்லிச்சாறு எடுத்து அதனோடு சம அளவு எலுமிச்சைச்சாறு சேர்த்து போதிய அளவு நீர் சேர்த்து தலைக்குத் தேய்த்துக் குளிப்பதனால் தலைமுடியில் படிந்திருக்கும் எண்ணெய்ப் பிசுசிசுப்பு குணமாவதோடு தலைமுடி மென்மையாகவும் பட்டுப்போலவும் தென்படும்.

* புதிதாகத் தயார் செய்த நெல்லிச் சாற்றை நீர் சேர்த்து பருகுவதாலோ அல்லது நெல்லி வற்றல் சூரணம் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு டம்ளர் நீரிலிட்டு போதிய தேன்விட்டு நாளைக்கு 2 அல்லது 3 முறை குடிப்பதனால் ரத்தக்கசிவு, மாதவிலக்கு ஆகிய பிரச்னைகள் மட்டுமின்றி, எவ்வகையில் ரத்தக்கசிவு ஏற்படினும் அதனைத் தடுத்துக் குணப்படுத்த இயலும்.

* அன்றாடம் இரண்டொரு நெல்லிக்காய்களை உண்டு வருவதால் எலும்புகள் பலப்படுவதோடு நகங்களின் மேல் ேதான்றும் வெண்புள்ளிகளும் மறைந்து போகும்.

* நெல்லிச்சாறு, கரும்புச்சாறு ஆகியவற்றுடன் தேன் சேர்த்து அன்றாடம் குடித்துவர ரத்தசோகை இல்லாமல் போகும்.

* ஒரு ஸ்பூன் வெந்தயப் பொடியோடு அரை டம்ளர் நெல்லிக்காய்ச்சாறு சேர்த்து குடிப்பதனால் வயிறு வலி குணமாகும்... பல்வேறு வயிற்றுப் பிரச்னைகளும் தணிந்து போகும்.

நெல்லிக்காய் கொத்துக் கொத்தாகக் காய்த்து சத்துக்கூடமாக விளங்கும்படி இறைவன் படைத்துள்ளான். ஆயுள், அறிவு, ஆரோக்கியம் வளரும் எண்ணத்தில்தான் அதியமான் ஒளவைக்கு நெல்லியைத் தந்திருக்கக்கூடும். நாமும் அதைப் போற்றிப் பயன்படுத்துவோம்!

நெல்லிக்காயை அன்றாடம் உண்டு வருவதால் புது மாப்பிள்ளை போல அழகான தோற்றமும் இளமையும் கிடைப்பதோடு மோகமும்
அதிகமாகும்.ஆயுள், அறிவு, ஆரோக்கியம் வளரும் எண்ணத்தில்தான் அதியமான் ஒளவைக்கு நெல்லியைத் தந்திருக்கக்கூடும்!

Post a Comment

0 Comments